தமிழ்ச் சிந்தனை மரபின் ஆளுமை பண்டிதர்… அயோத்திதாசர் புகழ் வாழ்க…மு.க.ஸ்டாலின் டிவிட்.!!

அயோத்திதாசர் தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். இவருடைய பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் அயோத்திதாசர் பண்டிதாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில், அவருடைய புகழ் வாழ வேண்டும் என  டிவிட் ஒன்றை செய்துள்ளார். அதில் ” திராவிடன், தமிழன் ஆகிய சொற்களை அரசியல் தளத்தில் அடையாளச் சொற்களாகப் பயன்படுத்திய முன்னோடியும் தமிழ்ச் சிந்தனை மரபின் தவிர்க்க முடியாத ஆளுமையுமாகிய பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்தநாள் இன்று.

அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பதைவிடச் சாதிப் பெருமையைப் புறக்கணிப்பதுதான் முதன்மையானது என அவர் அன்றே முழங்கியது இன்றும் எண்ணிப் பார்க்கத்தக்கது. பண்டிதரின் கருத்துகளை படிப்போம், அவரது பல்துறைப் பங்களிப்புகளை நமது அரசு அமைத்து வரும் நினைவு மண்டபம் உள்ளிட்ட முயற்சிகளின் வழியே அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம் அறிவுத்தளத்திலும் அரசியல் தளத்திலும் மிகப்பெரும் மாற்றுச் சிந்தனை மரபை முன்னெடுத்த அயோத்திதாசரின் புகழ் வாழ்க” என கூறியுள்ளார்.