Palladam Murder : தப்பியோட முயன்ற பல்லடம் படுகொலை முக்கிய குற்றவாளி.! 2 கால்களிலும் சுட்டுப்பிடித்த காவல்துறை.!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வசித்து வந்த அரிசிக்கடை உரிமையாளரும், பாஜக பிரமுகருமான செந்தில்குமார் என்பவரை ஒரு கும்பல் கடந்த ஞாயிற்று கிழமை அன்று அவரது வீட்டருகே அரிவாள் உள்ளிட்ட கூறிய ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.

இதனை தடுக்க வந்த செந்தில்குமாரின் சித்தி புஷ்பவதி , தம்பி மோகன்ராஜ் மற்றும் சித்தி ரத்தினாம்மாள் ஆகியோரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியது. இந்த கொடூர தாக்குதலில் சம்பவ இடத்திலேயே செந்தில் குமார் மற்றும் 2 பெண்கள் உள்ளிட்ட அவரது உறவினர்கள் 3 பேர் என நால்வரும் உயிரிழந்துவிட்டனர்.

இந்த சம்பவத்தை வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடேசன் முக்கிய குற்றவாளி என்றும், திருச்சியை சேர்ந்த செல்லமுத்து, தேனியை சேர்ந்த சோனமுத்தையா என்பவரும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. இதில் செல்ல முத்து முன்னதாக கைது செய்யப்பட்டு இருந்தார்.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான திருநெல்வேலி மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (எ) செல்வம் மற்றும் கோனமுத்தையா ஆகிய இருவரும் நேற்று திருப்பூர் வடக்கு போலீசில் சரண் அடைய வந்துள்ளனர். அவர்களை பல்லடம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இன்று காலை முக்கிய குற்றவாளி வெங்கடேசனை அழைத்துக்கொண்டு காவல்துறையினர் கொலை சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது கொலையாளி வெங்கடேசன் காவல்துறையினரிடம் இருந்து தப்ப முயற்சித்ததாக தெரிகிறது. இதனை ஆடுத்து, காவல்துறையினர் வெங்கடேஷை இரு கால்களிலும் சுட்டு பிடித்தனர்.

இரண்டு கால்களும் சுடப்பட்ட நிலையில் தற்போது வெங்கடேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுளளார்.