அரசுப் பள்ளி உதவியாளர்களின் பணி நேரத்தை மாற்றம் செய்து உத்தரவு!

பள்ளிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளரின் பணி நேரத்தை மாற்றி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.

தமிழநாட்டில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத அமைச்சுப் பணியாளர்கள், உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளரின் பணி நேரத்தை காலை (09.00 மணி முதல் மாலை 04.45 வரை) வரை மாற்றி அமைத்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றைக்கையில், பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரமானது காலை 10.00 மணி முதல் 5.45 மணி வரை உள்ளதால் பள்ளி வருகைப் பதிவேட்டை முடித்தல், ஆசிரியர்களின் விடுப்புகளை குறித்தல், பிற அலுவலகப் பணிகளை மேற்கொள்வதில் நிருவாக தொய்வு ஏற்படுவதாக தலைமை முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி ஆசிரியர்கள், அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளியின் அலுவலக பணிகளை மேற்கொள்ளவும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வேலை நேரம் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய அவசியம் மற்றும் தேவை எழுகிறது. அரசுப் பள்ளிகளின் நிருவாக மேம்பாட்டிற்கு ஆசிரியரல்லாத அமைச்சுப் பணியாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.  எனவே, அமைச்சுப் பணியில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களான உதவியாளர்/இளநிலை உதவியாளர்களின் வேலை நேரமானது காலை 9.00 மணி முதல் 4.45 மணி வரை மாற்றியமைத்து ஆணையிடப்படுகிறது.

மேலும், கோடை விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறைக் காலங்களில் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வேலை நேரமானது காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆணையை செயல்படுத்தவும், இச்செயல்முறைகளைப் பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புதலை உடன் அனுப்புமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.