I.N.D.I.A : இந்தியா கூட்டணி வென்றால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!

நேற்று நெய்வேலி எம்.எல்.ஏ சபா. ராஜேந்திரன் அவர்களின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செஞ்சி மஸ்தான், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்று திருமண மக்களை வாழ்த்தி வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் பேசினார். அவர் கூறுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வென்றால் மட்டுமே மத்திய அமைச்சரவையில் திமுக முக்கிய பங்காற்ற முடியும் என கூறினார்.

நேற்று காணொளி வாயிலாக முதல்வர் பேசுகையில், தனது தொகுதிக்கு தேவையானவற்றை கேட்டு பெறுவதில் எம்எல்ஏ சபா ராஜேந்திரன் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார்.  முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அதிகாரத்தில் இருக்கும் போது, நெல்லிக்குப்பம் பகுதியில் மலட்டாறு திட்டத்தை நிறைவேற்றி அப்பகுதி மக்களுக்கு பயன்பெறும் வகையில் நிலத்தடி நீர் மட்டம் உயர காரணமாக இருந்தவர் சபா ராஜேந்திரன் என கூறினார்.

அடுத்து, திருமண விழாவின் போது நான் வைக்கும் கோரிக்கைகள் இரண்டு தான். ஒன்று குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும். இன்னொரு கோரிக்கை மணமக்கள் வீட்டுக்கு விளக்காகவும்,  நாட்டுக்கு நல்ல தொண்டர்களாகவும் விளங்க வேண்டும். நம்முடைய வீடு மட்டுமல்ல. நாடும் நன்றாக இருக்க அதற்காக பங்களிக்க வேண்டும் இதுதான் தனது கோரிக்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.