வெளியூர்வாசிகளுக்கு அதிர்ச்சி..! 6 மணிக்கு மேல் ஆம்னி பஸ்கள் ஓடாது.! 

ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை காரணமாக வெளியூரில் வேலை பார்க்கும் குறிப்பாக சென்னை பகுதியில் வேலை பார்க்கும் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன.

விடுமுறை முடிந்து இன்று ஊர்திரும்ப இருந்த மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக ஆம்னி பஸ்கள் இன்று மலை 6 மணிக்கு மேல் இயங்காது என  ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 நாட்களாக அண்ணா நகர் சரக இணை ஆணையர், போக்குவரத்து அதிகாரிகள் , தவறான வழிகாட்டுதலின்படி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறி சோதனை நடத்தி உள்ளனர். இதில் முறையாக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை சிறை பிடித்துள்ளனர்.

சுமார் 120 பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போது, கடந்த 2022ஆம் ஆண்டு தான் போக்குவவரது துறை அமைச்சகம் சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதனை மீறாமல் நாங்கள் கட்டணம் வசூல் செய்து வருகிறோம்.

ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மாலை 6 மணி முதல் பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறுகையில், நேற்று மாலை தென்மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டாக கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் , விழா காலங்களில் அரசு பேருந்தை விட ஆம்னி பேருந்துகள் அதிகமாக இயக்கப்பட்டுள்ளது என்றும், சிறைபிடிக்கப்பட்ட பேருந்துகளை அதிகாரிகள் விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.