ஒடிசா ரயில் விபத்து: உலக தலைவர்கள் உருக்கமான இரங்கல் செய்தி.!

ஒடிசா ரயில் விபத்துக்கு உலக தலைவர்களான தைவான் அதிபர் சாய் இங்-வென் மற்றும் கனடா பிரதமர் என பலர் இரங்கல் செய்தியை பகிர்ந்து கொண்டனர்.

ஒடிசாவின் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று ஷாலிமார்- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 238 ஆக உயர்ந்துள்ளதாகவும், 900 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த கோர விபத்து இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்தியாவை உலுக்கிய இந்த ஒடிசா ரயில் விபத்துக்கு உலக தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல் செய்தியை பகிர்ந்து வர்கிறார்கள்.

அந்த வகையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது டிவிட்டர் பக்கத்தில், ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பான புகைப்படங்கள் என் இதயத்தை நொறுக்கும் அளவுக்கு உள்ளது. இந்த விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்ததோடு, இந்த கடினமான தருணத்தில் கனடா இந்தியாவிற்கு துணை நிற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தைவான் அதிபர் சாய் இங்-வென் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரார்த்தனை. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் மீட்பு நடவடிக்கைகள் தேவைப்படும் அனைவரையும் காப்பாற்றும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், ஒடிசாவில் ரயில் தடம் புரண்டதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று குறிப்பிடுள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களுக்கு ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்களான பென்னி வோங், அலி சப்ரி ஆகியோர் தங்களது இரங்கல் செய்தியை  தெரிவித்துள்ளனர்.