கடந்த 2020 ஆம் ஆண்டு என்எல்சி தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக என்எல்சி உயர் அதிகாரிகள் மீது காவல்துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு சம்பந்தமாக முன் ஜாமின் கேட்டு என்எல்சி அதிகாரிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த முன் ஜமீனுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் உயிரிழந்தோர் குடும்பத்தினர் இடையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி வழக்கு தொடர்பான விரிவான கூடுதல் தகவல்களை தாக்கல் செய்ய வேண்டும் என உறவினர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
ஆனால், நீதிபதி உத்தரவிட்ட அன்று மாலையே எனஎல்சி உயர் அதிகாரி ஒருவர் என்எல்சி ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் வழக்கு தொடர்பான விவரங்களை வழக்கறிஞரிடம் யாரும் வெளியில் சொல்லக்கூடாது என்றும், அப்படி கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
என்எல்சி மேலதிகாரி வெளியிட்ட சுற்றறிக்கை குறித்து இன்று உயிரிழந்தோர் உறவினர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி காலையில் தான் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மாலையில் என்எல்சி உயர் அதிகாரி ஒருவர் அனுப்பிய சுற்றறிக்கையானது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் அப்படி செய்த அதிகாரி யார் என விசாரித்து மூன்று நாளில் காவல் துறையினர் நீதிமன்றத்தில் கூற வேண்டும் என்றும் இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு ஒழுங்கு நடவடிக்கை அந்த அதிகாரி மீது எடுக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதற்குள் காவல்துறையினர் என்எல்சி விபத்து தொடர்பான விரிவான விசாரணையை மேற்கொண்டு அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.