கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ மனு!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முதல் நுழைவுவாயில் முன்பு கருக்கா வினோத் பெட்ரோல் பாட்டிலை பற்றவைத்து வீசினார். இதை பார்த்த சென்னை மாநகர் காவல்துறையினர் கருக்கா வினோத்தை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது வெடிபொருள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், கருக்கா வினோத் மீது கடந்த நவம்பர் 11ஆம் தேதி அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவம் நடத்திய சில தினங்களுக்கு முன்னர் தான் கருக்கா வினோத் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்துள்ளார்.

ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் .! NIA அதிகாரிகள் தீவிர சோதனை.!

வெளிய வந்தவுடனே, பாதுகாப்பு மிகுந்த ஆளுநர் மாளிகை முன்பே பெட்ரோல் குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். கருக்கா வினோத் சிறையில் இருக்கும்போது பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு, இந்த வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பிடம் (NIA) ஒப்படைக்கப்பட்டது.

இதை அடுத்து ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இன்று சம்பவ இடத்துக்கு, தடவியல் நிபுணர்களுடன் நேரில் வந்து தீவிர விசாரணை மேற்கொண்டதாகவும், காவல்துறை அதிகாரிகளிடம் சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டறிந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு தாக்கல் செய்துள்ளது. ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே, ஆயுதப்படை காவலர் சில்வானுவை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில், தற்போது ரவுடி கருக்கா வினோத்தை விசாரிகை மனு அளித்துள்ளது என்ஐஏ.