இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தில், விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா தவிர, சுனில், ரிது வர்மா, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வெளியான முதல் நாளில் இருந்து இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகத்தில் பல திரையரங்குகளில் வெளியான இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது. இந்நிலையில், படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து குவிந்து வருவதால், வசூலில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் என்பது போல் தெரிகிறது.
அந்த வகையில், இப்படம் வெளியான முதல் நாளில் 7 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், முதல் வார முடிவில் இந்த வசூல் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மார்க் ஆண்டனி படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு விஷால் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் இதைச் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை என்று தோணுது, ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்திற்கான ஆதரவை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதற்கு நன்றி மற்றும் எனது எதிர்கால திரைப்படங்களில் நடிக்கும்போது, இதை என் மனதில் வைத்துக் கொள்வேன், என்று வீடியோவில் கூறியுள்ளார்.