MagalirUrimaiThittam : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைதொகை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதன்படி, 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் இந்த திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்து, 13 பேருக்கு ஏடிஎம் அட்டைகளை வழங்கினார் முதலமைச்சர். தகுதியான பயனாளிகலில் சிலருக்கு முன்கூட்டியே வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 விண்ணப்பங்கள் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது.

இரண்டு கட்டமாக முகாம்கள், சிறப்பு முகாம்கள் மூலம் தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மகளிருக்கு (திட்ட பயனாளிகளுக்கு) தொகையை கையாளுவது குறித்து கையேடு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

பணத்தை எப்படி சேமிப்பது? ஏடிஎம் அட்டை வைத்து செய்யக்கூடாதவை என்ன என்பது குறித்து கையேடு வழங்கப்பட்டுள்ளது. கந்துவட்டிக்கு கடன் வாங்க வேண்டாம், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு போலி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என கையேட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்வ மகள், பொன்மகள் சேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமிக்க வேண்டும் என்றும் தொடர் சேமிப்பு திட்டம், நிலையான வாய்ப்பு திட்டத்தில் பணத்தை சேமிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.