மதுரை ரயில் தீ விபத்து மிகுந்த வேதனையைத் தருகிறது..! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மீக பயணமாக தென் இந்தியா நோக்கி சிறப்பு ரயிலில் 60-க்கும் மேற்பட்டோர் ஒரு பெட்டியில் பயணித்துள்ளனர். இவர்கள் கடந்த 17-ஆம் தேதி தமிழகம் வந்துள்ளனர். நேற்று நாகர்கோவிலை பத்மநாதர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு, இன்று அதிகாலை மதுரை வந்தடைந்துள்ளனர்.

இந்நிலையில், மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா விரைவு ரயிலில் தேநீர் தயார் செய்வதற்காக சிலிண்டர் பயன்படுத்தப்பட்டபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், இதுவரை 5 ஆண்கள் 4 பெண்கள் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ரயில் விபத்துக்கு காரணம் , ரயிலில் சட்ட விரோதமாக சிலிண்டர் போன்ற தீ பற்ற கூடிய பொருட்களை எடுத்து சென்றது தான் ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், “மதுரை ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனையைத் தருகிறது. இந்த கோர தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதலை தெரிவிக்கும் அதேவேளையில், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் நலம்பெற விரும்புகிறோம். ரயில் பயணங்களில் மக்கள் பாதுகாப்பினை உறுதிசெய்ய ஒன்றிய ரயில்வே அமைச்சகம் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.