MadrasHC: சீமான் வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன்? – ஐகோர்ட் உத்தரவு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக 2011ல் நடிகை விஜய லட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தன் மீது நடிகை விஜய லட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதன்படி, நடிகை விஜய லட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2011ம் ஆண்டு தன் மீது பதியப்பட்ட வழக்கை, ரத்து செய்ய வேண்டும் என சீமான் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

புகாரை திரும்ப பெறுவதாக நடிகை விஜய லட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் வழக்கை முடித்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கை விசாரிப்பதாகவும், எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் சீமான் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  எனவே, இந்த வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன் என காவல்துறை விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல்துறைக்கு வழங்க சீமான் தரப்புக்கும் உத்தரவிட்டு, சீமான் மீதான வழக்கின் விசாரணை செப்.26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், விஜய லட்சுமியின் புகார்கள், வாபஸ் பெற்ற விவரங்களை போலீஸ் தாக்கல் செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆணையிட்டார்.