அன்பு, இரக்கம், பகுத்தறிவுச் சிந்தனைக் கொண்ட ஒளிவிளக்குகளை ஏற்றிடுவோம்! – முதல்வர்

கல்விச் செல்வத்தை மாணவச் செல்வங்களுக்கு அள்ளித் தருபவர்கள் ஆசிரியப் பெருமக்களே என முதலமைச்சர் ஆசிரியர் தினம் வாழ்த்து.

டாக்டர்.இராதாகிருஷ்ணன் பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், மாணவச் செல்வங்களை ஒளிரும் நன்முத்துக்களாய் சமூகத்தில் விதைத்திடும் நற்செயல் புரிந்திடும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியப் பணியின் ஒளிவிளக்காய் திகழும் டாக்டர்.இராதாகிருஷ்ணன் பிறந்தநாளில், ஆசிரியர் வாழ்த்துகள்! அன்பு- இரக்கம்- பகுத்தறிவுச் சிந்தனைக் கொண்ட ஒளிவிளக்குகளை ஏற்றிடுவோம்.

காலத்தால் அழிக்க முடியாத அத்தகைய கல்விச் செல்வத்தை மாணவச் செல்வங்களுக்கு அள்ளித் தருபவர்கள் ஆசிரியப் பெருமக்களே. ஆசிரியர்களுக்குச் சிறந்த பயிற்சிகளை அளித்து அவர்தம் திறன்களை வளர்க்கும் நோக்கோடு தமிழ்நாடு அரசு 2022-2023-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ36.895.89 கோடியை ஒதுக்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்றினால் மாணவர்களிடையே உருவான கற்றல் இழப்புகளை ஈடு செய்ய 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு அவர்தம் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே 2 இலட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு, அக்டோபர் 2021 முதல் “இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தினை’ அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்திற்கென சுமார் ரூ163 கோடி இதுவரை செலவிடப்பட்டுள்ளது.

மேலும் முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு பயன்படும் வகையில் “நான் முதல்வன்” என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்குள் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்துக் குழந்தைகளும் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவுத் திறன்களைப் பெறும் நோக்கோடு 2021-22-ஆம் ஆண்டில் “எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டு, பல்வேறு செயல்பாடுகளுக்கென ரூ.66.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம், 18 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும், மூன்று சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ.25,000/- ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் “கவிமணி விருது” வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி மாணாக்கர்களுக்குத் தமிழ்மொழித் திறனறித் தேர்வு நடத்தி, ஆண்டு தோறும் 1500 பேர் தெரிவு செய்யப்பட்டு, இரண்டாண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள். எழுத்தாளர்கள், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள், மாணவர்கள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் பயன்பெறும் வண்ணம் மதுரையில் “முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம்” அமையவுள்ளது.

நாட்டின் எதிர்காலச் சொத்துக்களம் இளைய தலைமுறையை, நன்முத்துக்களாக உருவாக்கம் பெரும் பொறுப்புக்குச் சொந்தக்காரர்களாகிய ஆசிரியப் பேரினத்தை அரசும், நாட்டோரும், நல்லோரும் மதித்துப் போற்றுவதன் அடையாளமே இந்த ஆசிரியர் தின விழாக் கொண்டாட்டம். வகுப்பறை அனுபவங்களின் மூலம் இடையறாது பணி செய்து மென்மேலும் திறம் பெற்று சிறந்த ஆசிரியர்களாய் என்றும் சீர்பெற்று விளங்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment