LawAndOrder: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது..! பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.!

திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை பகுதியை சேர்ந்த பாஜக இளைஞரணி பொது செயலாளராக இருக்கும் ஜெகன் என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, மர்ம கும்பல் ஒன்றால் அரிவாள் போன்ற கூரிய ஆயுதங்களால் சரமாரியாக தாக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவத்தை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லை போலீசார், தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர். இதில் தற்போது வரை 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையிலுள்ள ஜெகனின் உடலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “பத்திரிக்கை ஊடகங்கள் நல்ல செய்தி கொடுத்தால் தான் சமுதாயம் மாறும், சமுதாயம் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களாவது தொடர்ந்து நாங்கள் இருப்போம் என்று உறுதியளிக்கிறேன். கடந்த ஒரு மாதத்தில் தென் தமிழகத்தில் 21 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது.”

“இதற்கு காரணமான ஒன்று, குடி அதிகமாகிவிட்டது, கஞ்சா பழக்கம் அதிகமாகிவிட்டது, அதனால் தைரியம் வந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் போலீசார் பதியும் வழக்குகள் கூட நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கிறது. இப்போது கூட இந்த நபர் மீது 16 கொலை வழக்குகள் உள்ளது. இது 17வது வழக்கு. இதற்கான தைரியம் எங்கிருந்து வருகிறது. கோர்ட்டிற்கு சென்றால் யாரும் வந்து சாட்சி சொல்ல மாட்டார்கள் என்ற தைரியம்.”

“இதை முதலில் சரி செய்ய வேண்டும். ஒரு குற்றவாளிக்கு நான் குற்றம் செய்தால் இந்த சமுதாயம் என்னை விடாது என்ற பயம் வரவேண்டும். குற்றவாளிகளுக்கு பயம் இல்லை. நேற்று திருப்பூரில் விவசாயம் செய்யும் இடத்தில் குடிக்காதீர்கள் என்று கூறியதற்கு, ஒரு மணி நேரத்தில் ஒரு கும்பலுடன் வந்து துண்டு துண்டாக வெட்டி உள்ளனர். எங்கிருந்து இதற்கு தைரியம் வருகிறது.”

“குறிப்பாக தென் தமிழகத்தில் முன்னேற்றம் வேண்டும். தொழில் நிறுவனங்கள் வர வேண்டும் வேலைவாய்ப்பு இருக்கக்கூடிய இளைஞர்கள் வன்முறை பக்கம் போகாமலும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும் வேண்டும். இதை தவறினால் நாம் வெடிகுண்டு இருக்க கீழே உட்கார்ந்து இருக்கிறோம் என்று அர்த்தம். ஏனென்றால் அவ்வளவு திறமை இருக்க கூடிய தென் தமிழகம் தொழில்துறையில் முன்னேறவில்லை.”

“இந்தியாவில் இருக்கக்கூடிய 112 பின்தங்கிய மாவட்டத்தில் தமிழகத்தில் இரண்டு இருக்கிறது. அந்த இரண்டும் தென் தமிழகத்தில் இருக்கிறது. இதற்கான தீர்வு என்னவென்று கேட்டீர்கள் என்றால் அதற்கான நேரடி பதில் இல்லை. குற்றவியல் நீதி சட்டத்தை சரி செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றவியலை தனியாக பிரிக்க வேண்டும்”

“ஒரே காவல்துறை முதலமைச்சர் வந்தால் பாதுகாப்பு, உதயநிதி ஸ்டாலின் வந்தால் பாதுகாப்பு, அதே காவல்துறை நேரம் இருந்தால் குற்றங்களை கண்டுபிடிக்க செல்கிறார்கள், வழக்குகளை பதிவு செய்கிறார்கள், இன்றைக்கு மகாராஷ்டிராவில் மிகவும் அற்புதமாக செய்திருக்கிறார்கள் தெலுங்கானாவில் அதற்கான முயற்சி எடுத்து இருக்கிறார்கள்.” என்று கூறினார்.