மூன்று நாள் பயணமாக, இந்தியா வந்தடைந்த பூடான் மன்னர் ஜிக்மே வாங்சுக்.!

திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் பூட்டான் மன்னர் ஜிக்மே வாங்சுக், மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.

இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பினை ஏற்று, மூன்றுநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்த, பூட்டான் மன்னர் ஜிக்மே வாங்சுக்-ஐ விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.

இது குறித்து ஜெய்சங்கர் தனது ட்விட்டரில், பூடான் மன்னன் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை, வரவேற்பதில் பெருமையடைகிறேன். அவரது வருகை நெருக்கமான மற்றும் தனித்துவமான இந்தியா-பூடான் உறவை மேலும் வலுப்படுத்தும் என்று பதிவிட்டுள்ளார்.

பூடான் மன்னருடன் இந்திய பயணத்தில், பூட்டானின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் தண்டி டோர்ஜி மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். பூடான் மன்னர் அவரது பயணத்தின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோரை சந்திக்கிறார்.

இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையே வழக்கமான உயர்மட்ட பரிமாற்றங்கள் மற்றும் நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த முறை பிப்ரவரி 2023 இல், பூட்டானின் தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர், மற்றும் பாராளுமன்றக் குழு இந்திய பயணத்தின்போது ஜனாதிபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தது.

தூதுக்குழுவை வரவேற்ற குடியரசுத் தலைவர், அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக மற்றும் தனித்துவமான நட்புறவை இந்தியா ஆழமாக மதிக்கிறது என்றார், மேலும் இந்த ஆண்டு பூடான் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளின் (LDC) குழுவில் இருந்து முன்னேறி, 2034 ஆம் ஆண்டுக்குள் உயர் வருமானம் கொண்ட பொருளாதாரமாக மாறும்   என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Leave a Comment