போருக்கு தயாராகுங்கள்! ராணுவ உயர்மட்ட ஜெனரலை நீக்கி…’கிம் ஜாங் உன்’ அதிரடி!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் இராணுவ உயர்மட்ட ஜெனரலை பதவி நீக்கம் செய்து, இராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்தவும், போருக்கான தயாரிப்புகளை மேற்கொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே, வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் ஏழாம் பொருத்தம் என்றே சொல்லலாம். இதில், அடிக்கடி ஏவுகணை சோதனை என்ற பெயரில் வடகொரியா ஏவுகணைகளைத் தொடர்ச்சியாக  சோதனை செய்து வருகிறது.

அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான இராணுவப் பயிற்சிகளுக்கு முன்னதாக வடகொரியா அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதாவது, அமெரிக்காவும் தென் கொரியாவும் ஆகஸ்ட் 21 மற்றும் 24 க்கு இடையில் தங்கள் நாட்டின் இராணுவ ஒத்திகையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதனால், வடகொரியாவின் வடக்கு பகுதியில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறது.

இந்நிலையில், இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரலுக்குப் பதிலாக ஜெனரல் ரி யோங் கில் நியமித்து, ஆயுதங்களின் உற்பத்தியை அதிகப்படுத்த உத்தரவிட்டார். மேலும், போர் பயிற்சிகளை மேற்கொள்ளவும், ராணுவம் தனது படைகளை போருக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கிம் அழைப்பு விடுத்திருக்கிறார். கடந்த வாரம் கூட, அவர் நாட்டின் ஆயுத தொழிற்சாலைகளுக்குச் சென்றார். அங்கு அவர் மேலும் ஏவுகணை இயந்திரங்கள், பீரங்கி மற்றும் பிற ஆயுதங்கள் கட்டப்பட வேண்டும் என்று கூறினார்.

வடகொரியா குடியரசு நிறுவப்பட்ட நாளின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், செப்டம்பர் 9ஆம் தேதி ராணுவ அணிவகுப்பை நடத்த உள்ளது. இதனால், வடகொரியா தனது இராணுவப் படைகளை வலுப்படுத்த பல துணை ராணுவ குழுக்களை பயன்படுத்துகிறது.