ஒரு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும்.! காவேரி ஒழுங்காற்று குழு பரிந்துரை.!  

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய காவேரி நீரை அம்மாநில அரசு தரவில்லை என்பதால், தமிழக அரசு தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. காவேரி மேலாண்மை வாரியம் மூலமாகவும், மத்திய அரசு மூலமாகவும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் பெயரில் அமைக்கப்பட்ட காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவின்படி, காவேரியில் இருந்து கடந்த 4 மாதங்காளாக தமிழகத்திற்கு கர்நாடக அரசு தரவேண்டிய தண்ணீர் அளவானது, ஜூன் மாதம் 9 டிஎம்சி, ஆகஸ்ட் மாதம் 45 டிஎம்சி, செப்டம்பர் மாதம் 36 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும்.

ஆனால் கடந்த 4 மாதங்களாக கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை கொடுக்கவில்லை. கடந்த 4 மாதங்களில் மட்டும் 40 டிஎம்சி அளவில் தண்ணீர் திறந்துவிட வேண்டியுள்ளது. இம்மாதம் மட்டும் அதிகபட்சமாக 25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டியுள்ளது.

இந்நிலையில் தான் இன்று காவேரி ஒழுங்காற்றுகுழு அலோசனை நடத்துகிறது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் காணொளி வாயிலாக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு தமிழகத்திற்கான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கர்நாடகா அரசானது , அடுத்த 15 நாட்கள் நாளை முதல் 12.09.2023 வரை ஒரு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் எனவும், இதற்கான உத்தரவை காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவிட வேண்டும் எனவும் காவேரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளாது.

நாளை டெல்லியில் காவேரி மேலாண்மை வாரிய கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில், தமிழ்நாடு கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில நீர்வளத்துறை பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர் இதில் காவேரி ஒழுங்காற்று குழு கூட்டத்தின் பரிந்துரை பற்றியும் , தமிழகத்தின் கோரிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.