பாகிஸ்தான் வீரருக்கு எதிராக ‘ஜெய் ஸ்ரீ ராம் ‘ முழக்கம்.! உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்.!

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நேற்று குஜராத், அஹமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசி பாகிஸ்தான் அணியை 191க்கு ஆல்அவுட் ஆக்கியது. அதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 30.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

இந்தியா அபார வெற்றி.. மைதானத்தில் ‘வந்தே மாதரம்’ பாடிய ரசிகர்கள்..!

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிவீரர் முகமது ரிஸ்வான் பேட்டிங் செய்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய போது சில ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம் ‘ என கோஷமிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பலரும் ரசிகர்களின் இந்த செயலுக்கு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில்,  நமது நாடு விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. அப்படி இருந்தும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு நேர்ந்த இப்படிப்பட்ட செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஒரு விளையாட்டானது நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும், உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். வெறுப்பைப் பரப்பும் கருவியாக விளையாட்டு பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.