வீட்டில் கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல் இருக்கா? இதோ அதற்கான தீர்வு…

கல் அடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என சொல்வார்கள். கண் திருஷ்டி படாமல் இருக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளது .அதில் ஒரு சில முறைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்…

குழந்தைகளுக்கு கண் திருஷ்டி போக பின்பற்ற வேண்டியவை :

ஒரு குழந்தை பிறந்து 16வது நாளிலிருந்து சுத்தமான கரிசலாங்கண்ணி சாரில்  இருந்து தயாரிக்கப்பட்ட கண் மையை பயன்படுத்துவது சிறந்தது. ரசாயனம் கலந்த கருப்பு பொட்டுகளை பயன்படுத்தினால் அந்த மென்மையான சருமத்தில் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது .

சில குழந்தைகள் நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள் யாராவது வந்து பார்த்து கண் பட்டுவிட்டால் குழந்தைகள் சரியாக சாப்பிட மாட்டார்கள். அப்போது குழந்தை சாப்பிட்டு மீதம் வைத்த சாப்பாட்டை மூன்று முறை தலையை சுற்றி காகம் அல்லது நாய்களுக்கு போட வேண்டும்.

பெரியவர்களுக்கு திருஷ்டி போக செய்ய வேண்டியவை

5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு உப்பு சுற்றி போட்டால் சிறப்பு. இதை பெரியவர்களுக்கும் செய்யலாம். பெண்கள் என்றால் வெள்ளிக்கிழமையிலும் ஆண்கள் என்றால் சனிக்கிழமைகளிலும் செய்யலாம். உப்பை உள்ளங்கையில் வைத்து வலப்புறம் ஆகவும் இடப்புறமாகவும் தலையில் இருந்து கீழ் நோக்கியும் மூன்று முறை சுற்றி அந்த உப்பை ஒரு வாலியில் போட்டு கரைந்த பின்பு வெளியே ஊற்றி விட வேண்டும்.

குளிக்கும்போது மூன்று கைப்பிடி அளவு உப்பு எடுத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால் கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் விலகும்.

உப்பு,கடுகு, வரமிளகாய், நம் வீட்டு வாசலில் உள்ள மண் மற்றும் சில காகிதங்கள் போன்றவற்றை ஒரு அட்டை பெட்டியில் வைத்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சுற்றி வாசலில் வைத்து எரித்து விட வேண்டும். இந்த முறையை வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

வீட்டு நுழைவாயிலில் கண்ணாடி அல்லது விநாயகர் படம் மாட்டுவது சிறந்தது . இது கண் திருஷ்டிகள் வீட்டின் உள்ளே நெருங்க விடாது.

ஒரு உருளியில் தண்ணீரில் பூக்களை வைக்கலாம். எலுமிச்சையை இரண்டாக நறுக்கி ஒரு பாகத்தில் மஞ்சளும் ஒரு பாகத்தில் குங்குமம் தடவி அதற்கு பக்கத்திலேயே வைக்க வேண்டும். ஒரு கிளாஸ் டம்ளரில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து தண்ணீர் ஊற்றி அதே இடத்தில் வைக்க வேண்டும்.

வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதேனும் சிறு சிறு விபத்துக்கள் அடிக்கடி நேர்ந்தால் நிச்சயம் அது கண் திருஷ்டியாக தான் இருக்கும். வெண்கடுகு, உப்பு இவற்றை ஒன்றாக்கி  வீடு முழுவதும் அதாவது சமையலறை, பூஜையறை, ஹால் போன்றவற்றில் இரவு நேரத்தில் தூவி விட வேண்டும். பின்பு காலையில் அதை சுத்தமாக எடுத்து விடவும் இவ்வாறு மூன்று நாட்கள் செய்தால் எத்தனை பெரிய துன்பமான காரியங்கள் நடந்தாலும் அது இல்லத்திலிருந்து நிவர்த்தி ஆகும். வெண்கடுகு மற்றும் உப்பும் அதீத பலனை தரக்கூடியது.

இதுபோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்திருஷ்டி என்பது நம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டிய விஷயம். வாரம் ஒரு முறை இந்த திருஷ்டிகளை கழித்தால் அந்த இல்லத்தில் ஆரோக்கியம் நிறைந்து இருக்கும். எதிர்பாராத விரயங்கள் ,மன உளைச்சல், கை, கால் வலி போன்றவைகள் இருந்தால் கண் திருஷ்டியும் ஒரு காரணமாகும். எனவே இந்த முறைகளை பின்பற்றி கண் திருஷ்டிகளை வெளியேற்றி மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் வாழ்வோம்.