கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்பாக இன்று காலையும் சென்னையில் 4 இடங்களில் இது தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனைகள் தொடர்ந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் சோதனை செய்து 106 பேர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு அவர்கள் தீவிர ரகசிய கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
அவர்களது வீடுகளில் அவ்வப்போது சோதனைகள் தொடர்ந்து வருகின்றன. சென்னையில் மட்டும் இந்த கண்காணிப்பு வளையத்தில் 18 பேர் இருக்கின்றனர். இம்மாதம் ஏற்கனவே கடந்த 10ஆம் தேதி சென்னையில் சோதனையின் போது 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி நடந்த சோதனையில் ஒருவரது வீட்டில், 50 லட்சம் இந்திய பணம், 50 ஆயிரம் வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல இம்மாதத்தில் 3வது முறையாக இன்று காலையும் சென்னையில் 4 இடங்களில் இது தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை காவல்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேப்பேரி பகுதியில் புகாரி, ஓட்டேரி பகுதியில் சாகுல் ஹமீது என்பவரது வீடு மற்றும் மேலும் 2 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.