சர்வதேச யோகா தினம்: உலகிற்கு இந்தியா அளித்துள்ள மதிப்புமிக்க பாரம்பரியம்… அமித் ஷா.!

சர்வதேச யோகா தின வாழ்த்து தெரிவித்த அமித் ஷா, உலகிற்கு இந்தியா அளித்துள்ள மதிப்புமிக்க பாரம்பரியம், யோகா என கூறியுள்ளார்.

இன்று ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்ட்டு வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஐநா சபை அங்கீகரித்தது முதல் இந்த ஆண்டு 9-வது சர்வதேச யோகா தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒருமுகப்படுத்த யோகா ஒரு ஊடகமாக இருப்பதாக குறிப்பிட்டார், மேலும் யோகா பயிற்சி செய்வதால் மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறிய அமித்ஷா, யோகா இந்த உலகத்துக்கு நமது இந்தியா அளித்துள்ள விலைமதிப்பற்ற பாரம்பரியம் என்று கூறினார்.

இது குறித்து அமித்ஷா தனது டிவீட்டில், மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது டிவீட்டில் குறிப்பிட்டுள்ளதாவது, இன்று ‘யோகா’ என்பது உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கை முறையாக மாறியுள்ளது, இதற்கு நமது பிரதமர் மோடி யோகாவை உலகம் முழுதும் கொண்டு செல்ல உழைத்துள்ளார்.

யோகாவின் பல நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறையை மேம்படுத்தவும் யோகா ஒரு தளமாக செயல்படுவதாகவும் அமித்ஷா குறிப்பிட்டார்.