வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரையில் 13வது ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த முறை உலக கோப்பையை முதன் முறையாக இந்தியாவில் மட்டுமே நடைபெற உள்ளது. சென்னை, அகமதாபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட 10 நகரங்களில் உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் நடப்பு செம்பியனான இங்கிலாந்து, இந்தியா , ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் , நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன. இதனை முன்னிட்டு உலக கோப்பையானது மேற்க்கண்ட நாடுகளில் வரிசையாக காட்சிப்படுத்தப்பட்டு வந்தது.
ஒவ்வொரு நாடாக காட்சிப்படுத்தப்பட்ட உலக கோப்பை தற்போது சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அந்த புகைப்படத்தை தனது X சமூக வலைதளத்தில் பதிவிட்டு INDIA Will Win எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதனை இரண்டு விதமாக எடுத்துக்கொள்ளலாம். ஒன்று இந்தாண்டு உலக கோப்பையை இந்தியா வெல்லும் எனவும், மற்றொன்று, திமுக அங்கம் வகிக்கும் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி வெல்லும் எனவும் முதல்வர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளது போல உள்ளது என கூறப்படுகிறது.
வரும் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தான் இந்திய அணி தனது முதல் 2023 உலகக்கோப்பை போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.