கேரளாவில் அதிர்ச்சி.. பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி தூக்கி வீசிய கொடூரம்.!

Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர் பகுதியில் இன்று காலை வெள்ளிக்கிழமை (மே3) ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த சாலையில் துப்புரவுப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த சமயத்தில் கீழே இருந்த பொட்டலத்தை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது  பச்சிளம் குழந்தையின் உடல்  அதில் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, அதிர்ச்சி அடைந்த துப்புரவுப் பணியாளர்கள் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பனம்பில்லி நகர்  காவல்துறையினர் ஆய்வு செய்தனர். பின், அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போது அதில் பதிவான சிசிடிவியில் அந்த சாலைக்கு அருகில் இருக்கும் வன்ஷிகா அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அந்த பச்சிளம் குழந்தை துணியில் கட்டப்பட்டு கீழே தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது.

பின், காவல்துறையினர் இந்த குடியிருப்பில் யார் கர்ப்பிணியாக இருக்கிறார்? என்ற விவரத்தையும் விசாரிக்க தொடங்கினார்கள். ஆனால், விசாரணை செய்ததில் யாரும் அந்த குடியிருப்பில் கர்ப்பிணியாக இல்லை என்பது தெரிய வந்தது. அங்கு மொத்தமாக 21 அடுக்குமாடி குடியிருப்புகளில், மூன்று குடியிருப்புகள் காலியாக உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை சமீபத்தில் யாராவது பயன்படுத்தினார்களா? எனவும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில், அந்த பச்சிளம் குழந்தையின் உடல் அமேசான் பார்சல் கவரில் சுற்றப்பட்டு பிளாட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த கவரில் எதாவது முகவரி இருக்கிறதா? என காவல்துறையினர் அதில் கவனம் செலுத்தி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இந்த வழக்கை டிசிபி தலைமையிலான தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி தூக்கி வீசிய  இந்த கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.