ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி – முக்கிய தரகர் கைது!

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி வழக்கில், நிறுவனத்தின் முக்கிய தரகரை கைது செய்தது பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு.

ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்தது பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீஸ். அதன்படி, ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி வழக்கில், நிறுவனத்தின் முக்கிய தரகராக செயல்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது.

நூற்றுக் கணக்காக முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி வரை வெங்கடேசன் வசூலித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் கைதான வெங்கடேசனிடம் இருந்து சொகுசு கார், ரூ.2.2 லட்சம் ரொக்க பணம், செல்போன், லேப்டாப் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், வெங்கடேசனின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.எஃப்.எஸ். நிறுவனம், முதலீடு செய்யும் தொகைக்கு, 10 முதல் 25 சதவீதம் வரை மாதந்தோறும் வட்டி தருவதாகக்கூறி, 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.