தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறதா என்பதை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட எல்லைகளில் கேரளாவில் இருந்து வரும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது என கடந்த 2018ஆம் ஆண்டு நெல்லை நீதிமன்றத்தில் தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்,.
இதுகுறித்து அப்போது நெல்லை நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ், நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்த நீதிமன்ற உத்தரவு சரிவர பயன்படுத்தப்படவில்லை எனவும், நெல்லை மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு கூறுகையில், தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லபடுகின்றன. ஆனால், தமிழகத்தில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டடுகிறதா? என கேள்வி எழுப்பினர்.
மேலும், தமிழக எல்லையோர மாவட்டங்களில் அருகாமையில் உள்ள மாநிலங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டு வழக்கை பிப்ரவரி மாதத்திற்க்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.