தமிழகத்தில் இன்று முதல் 13ம் தேதி வரை குரூப் 1 முதன்மைத் தேர்வு!

தமிழகத்தில் இன்று முதல் 13ம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 1 முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 முதன்மைத் தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.

இந்த தேர்வினை ஆண்கள் 1,333 பேர், பெண்கள் 780 பேர் என மொத்தம் 2,113 பேர் தேர்வு எழுதுகின்றனர். கட்டாய தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவு மற்றும் விரிவாக எழுதுதல் உள்ளிட்ட 4 தாள்களாக தேர்வு நடைபெற உள்ளது. 2022 நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 1 முதல் நிலை தேர்வை 1.10 லட்சம் தேர்வர்கள் எழுதினர்.

இந்த நிலையில், முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான தேர்வுகள் இன்று முதல் தொடங்கி 13ம் தேதி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 10 – 13ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை http://tnpscexams.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடப்படுகிறது.