TNGovernor: பல்கலை., துணைவேந்தர் நியமனத்திற்கு குழு அமைத்து ஆளுநர் உத்தரவு! முதல்முறையாக யுஜிசி பிரதிநிதி!

சென்னை பல்கலை., கோவை பாரதியார் பல்கலை. மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்ய கமிட்டி அமைத்து ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டார்.  ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் தலா நான்கு உறுப்பினர்களை கொண்ட தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் முறையாக யுஜிசியின் பிரதிநிதி துணை வேந்தர்கள் நியமன தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர்கள் கட்டாயம் இல்லை என தமிழ்நாடு அரசு நேற்று ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது தமிழக அரசின் எதிர்ப்பை மீறி, தேர்வு குழுவில் யுஜிசியின் பிரதிநிதியை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டார்.