ஜி7 மாநாடு: இத்தாலி பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

G7 Summit [file image]

ஜி7 இத்தாலி : இத்தாலியில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது முதல் சர்வதேச பயணத்தை முடித்துக்கொண்டு இன்று டெல்லி திரும்பினார். ஜி7 அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் கடந்த 13ம் தேதி தொடங்கியது.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜூன் 13 முதல் 15 ம் தேதி (இன்று) வரை நடைபெறும் இந்த ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக நேற்று முன்தினம் (ஜூன் 13) இரவு இந்தியாவில் இருந்து இத்தாலிக்கு சென்றார்.

பின்னர், நேற்று இத்தாலியின் அபுலியா பகுதியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக அவர் கலந்து கொண்டார். அப்போது, AI மற்றும் எனர்ஜி, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் போன்ற தலைப்புகளின் கீழ், பிரதமர் மோடி பேசினார். இந்தியா தனது வளர்ச்சிப் பயணத்திற்கு AI ஐ எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி பேசினார்.

இந்த மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா உள்ளிட்ட பல உலகத் தலைவர்களுடனும் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு அவர், இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டு, இன்று காலை டெல்லி வந்தடைந்தார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

மோடியின் இத்தாலி பயணம் ஹைலைட்ஸ்

  • இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி பிரதமர் மோடி உடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
  • இத்தாலியில் போப் ஆண்டவரை சந்தித்ததும், கட்டியணைத்த பிரதமர் மோடி.
  • காலிஸ்தான் சர்ச்சைகளுக்குப் பிறகு, முதல் முறையாக G7 மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
  • மேலும், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோரையும் பிரதமர் சந்தித்தார்.

போப் வித் மோடி

ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவரான போப் பிரான்சிஸை பிரதமர் மோடி ஆரத் தழுவினார். ஜி7 கூட்டமைப்பின் கூட்டத்தில், முதல் முறையாக கலந்து கொண்ட போப் பிரான்சிஸ் சிறப்புரையாற்றினார்.

ஜியார்ஜியா மெலோனி வித் பிரதமர் மோடி

பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட வீடியோவை பகிர்ந்த இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, “வணக்கம் நண்பர்களே, #மெலோடி” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.