தீ விபத்து: எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடல்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு அருகே அமைந்துள்ள எண்டோஸ்கோபி அறையில் இன்று தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சப்தர்ஜங் மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மேலே உள்ள உள்ள பழைய OPD-ன் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள எண்டோஸ்கோபி அறையில் இன்று காலை 11:54 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே, அருகில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 30 நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது, இந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டது.