நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சிறைத்தண்டனை – உயர்நீதிமன்றம்

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் 2017 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில், இதில் ரூ.20 கோடி அளவிற்கு போலியான ஆவணங்கள் தாக்கல் செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்கபட்டதால், அரசு அதிகாரிகள் மீதும், நெடுஞ்சாலை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை கோரி ராஜேந்ந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிலத்தின் உண்மையான உரிமையாளருக்கு தான் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், அந்த உத்தரவை மீறி போலியான ஆவணங்கள் தாக்கல் செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில், காஞ்சிபுர மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா, மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்த நர்மதா, தாசில்தாராக இருந்த மீனா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பாக விசாரணை நடைபெற்று வந்த போது, தன்னுடைய தவறுக்கு மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்த நர்மதா மன்னிப்பு கோரிய நிலையில், போலியான ஆவணங்களுக்கு வழங்கப்பட்ட, 90% இழப்பீடு வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தன் மீதான நீதிமன்ற வமதிப்பு வழக்கை கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, முன்னாள் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளதோடு, நீதிமன்ற உத்தரவை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்களுக்கு நீதிமன்றம் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.