இபிஎஸ் பிரதமர் வேட்பாளரா? அதை கேட்டாலே தலை சுற்றுகிறது – ஓபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்று கேட்டாலே தலை சுற்றுகிறது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். மருது சகோதரர்கள் 222வது குருபூஜை விழாவையொட்டி, காளையார்கோவிலில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக சார்பாக மருது சகோதரர்கள் நினைவிடத்துக்கு வருகை புரிந்து வீர மாமன்னர்களுக்கு புகழ் அஞ்சலியை செலுத்தியுள்ளோம். மருது சகோதரர்களின் வீரம், விவேகம் என அவர்களது பண்புகள் உலகம் இருக்கும் வரை நிலைத்து இருக்கும். இது வரும் காலங்களில் இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் என்றார்.

ஆளுநர் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் – எம்.எல்.ஏ.செல்வப்பெருந்தகை

இதனைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், செய்தியாளர்களிடம் இன்னொரு முறை சொல்லுங்கள், இன்னொரு முறை சொல்லுங்கள் என கிண்டலாக கேட்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்று கேட்டாலே அப்படியே தலையை சுற்றுகிறது என கூறிவிட்டு ஓபிஎஸ் சென்றார்.

இதனிடையே, கோவை விமானத்தில் பாஜக மாநில தலைவர்  அண்ணாமலையிடம் இதே கேள்வி கேட்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி பிரதமராக வரும் சூழல் உள்ளது என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளதற்கு சிரிப்புதான் என் பதில். பிரதமர் பதவிக்கு என மரியாதை உள்ளது. மூன்றாவது முறையாக மோடிதான் பிரதமர் வேட்பாளர். எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் கனவு இருக்கலாம் என்றும் தமிழர் ஒருவர் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றால், அதற்கு தமிழகத்தில் பாஜக ஆட்சி வர வேண்டும், பாஜகவில் யாருக்கும் வளர தடையில்லை என தெரிவித்துள்ளார்.