#Chandrayaan-3: விண்கலத்தில் இருந்து தனியாக பிரிந்தது விக்ரம் லேண்டர்.!

சந்திரயான்-3 விண்கலத் திட்டம் இன்று முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. நிலவின் தென் துருவத்தை ஆராய விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் விண்கலத்தில் உள்ள உந்துவிசைக் கலனில் இருந்து, ‘விக்ரம்’ லேண்டர் தனியாக பிரிந்ததுள்ளது.

இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆரம்பித்த நிலையில், நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது.

சுற்றுப்பாதை குறைப்பு:

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டது. என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 170 கிமீ x 4313 கிமீ. தொலைவில் கொண்டு வரப்பட்டது.

அடுத்ததாக, ஆகஸ்ட் 9ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தியது. அதன், என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 174 கிமீ x 1437 கிமீ. கொண்டு வரப்பட்டது.

அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி மூன்றாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு 150 கிமீ x 177 கிமீ சுற்றுவட்டப் பாதையை அடைந்துள்ளது. அடுத்த செயல்பாடு ஆகஸ்ட் 16, 2023 அன்று சுமார் 08.30 மணிக்கு திட்டமிடப்பட்டு இருந்தது.

இறுதிகட்ட சுற்றுவட்டப்பாதை:

அதன்படி, நேற்று இஸ்ரோ வெளியிட்ட அதிகாரபூர்வ தகவலின்படி, சந்திரயான் -3ஐ 153 கிமீ x 163 கிமீ என்ற சுற்றுவட்டப்பாதையில் கொண்டு செல்லப்பட்டது. இத்துடன், சந்திரனைக் சுற்றிவரும் சுற்றுவட்ட பாதைகள் நிறைவடைகின்றன. இதுவே கடைசி கட்ட சுற்றுவட்ட பாதையாகும். சந்திராயன்-3யின் ப்ராபல்ஷன் பகுதி மற்றும் லேண்டர் பகுதி ஆகியவை தனித்தனி பயணங்களுக்கு தயாராகி வருவதற்கான நேரம் என குறிப்பிடப்பட்டு இருந்தன.

பிரிந்தது ‘விக்ரம்’ லேண்டர்:

அதன்படி, தற்பொழுது சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து ‘விக்ரம்’ லேண்டர் பகுதியானது தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உந்துவிசைக் கலனும் லேண்டர் பகுதியும் தனியாகப் பிரிந்த நிலையில், இரண்டும் தனித்தனியாக தங்களது பயணத்தை மேற்கொள்ளும்.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலின்படி, ப்ராபல்ஷன் மாட்யூலில் (PM) இருந்து லேண்டர் பகுதி (LM) வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது என்றும், நாளை மாலை 4 மணிக்கு, திட்டமிடப்பட்ட டீபூஸ்டிங்கில் லேண்டர் பகுதி குறைந்த சுற்றுப்பாதையில் இறங்க உள்ளது என தெரிவித்துள்ளது.

அதன்படி, தனியாகப் பிரித்த ‘விக்ரம்’ லேண்டர் நிலாவின் மேற்பரப்பை நோக்கி அனுப்புவதற்கான முதல்கட்டப் பணி இன்று தொடங்குகிறது. இப்பொது, உந்துவிசைக் கலனின் உதவி இல்லாமல், லேண்டர் பகுதியானது நிலவின் மேற்பரப்பிற்கான மீதமுள்ள பயணத்தை தானாக மேற்கொள்ளும்.

அடுத்தகட்டமாக, விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதற்கான நிகழ்வில், அதிகபட்சமாக 100 கி.மீ. தொலைவிலும் குறைந்த பட்சமாக 30 கி.மீ. தொலைவில் குறைக்கப்பட்டு நிலவுக்கு நெருக்கமாக அதன் சுற்றுப்பாதையில் சுற்றி வரும். மறுபுறம், ப்ராபல்ஷன் மாட்யூல் (உந்துவிசை கலன்) நிலவின் சுற்றுவட்ட பாதையில் அதன் பயணத்தைத் தொடரும்.

பின்னர், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 5.47 மணிக்கு ‘விக்ரம்’ லேண்டரானது, சுற்றுப்பாதையில் இருந்து நிலவின் தென் துருவப் பகுதியில் மென்மையாக தரையிறங்கும் பணியை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.