துபாய் தீ விபத்து – முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர். 

இதுதொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம் (வயது 43) மற்றும் அதே பகுதியைச் சேர்ந் முகமது ரபிக், (வயது 49) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை இப்பணியில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன் என்றுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.  துபாயின் அல் ராஸ் பகுதியில் அடுக்குமாடி கட்டடம் உள்ளது. குடியிருப்பு வளாகம், கடைகள் நிறைந்த இந்த கட்டடத்தில், நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் தமிழகம், கேரளாவைச் சேர்ந்த நான்கு இந்தியர்கள் உட்பட 16 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment