ஒடிசா ரயில் விபத்து..! சிக்கித் தவிக்கும் 250 பயணிகள் சென்னை பயணம்..!

ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தில் இருந்து சிக்கித் தவிக்கும் 250 பயணிகள் சென்னை புறப்பட்டனர்.

ஒடிசாவில் நேற்று ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும்  பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. காரக்பூர் மற்றும் பத்ரக்கில் இருந்து மருத்துவ உபகரணங்களுடன் விபத்து நிவாரண ரயில்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதுவரை கிடைத்த தகவலின்படி 238 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 650 பயணிகள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ ஆகிய மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார்.

மேலும் தென்கிழக்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் பிற முதன்மை அதிகாரிகளும் அந்த இடத்தில் உள்ளனர். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து சிக்கித் தவிக்கும் சுமார் 250 பயணிகள், புவனேஸ்வர்-டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பத்ரக்கில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டனர். இவர்கள் நாளை காலை 9:00 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடைவார்கள்.

மேலும், ஒடிசா ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த 55 பேர் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.