எண்ணூர் எண்ணெய் கசிவு… சிபிசிஎல் நிறுவனம் முழு பொறுப்பை ஏற்க வேண்டும்.! CPI முற்றுகை போராட்டம்.!  

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டன. குறிப்பாக எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வந்த மத்திய அரசின் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர்.

எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வந்த மத்திய அரசின் பெட்ரோலியம் நிறுவனமான சிபிசிஎல் (CPCL) நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் கழிவு, வெள்ளத்தில பக்கிங் கால்வாய் வழியாக, கொசஸ்தலை ஆற்றில் கலந்து சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் எண்ணெய் படலமாக மிதந்தது. இதனால் சுற்றுவட்டார எட்டு கிராம மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து எண்ணெய் அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது எண்ணெய் கழிவுகள் பெரும்பாலும் அகற்றப்பட்டு விட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவியும் அறிவித்தது.

எண்ணெய் கசிவு : கூடுதல் நிவாரணம் வழங்குக தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.!

எண்ணூர் எண்ணெய் கசிவு பாதிப்புக்கு சிபிசிஎல் நிறுவனம் முழு பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் என இன்று சிபிசிஎல் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், எண்ணூர் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்த எண்ணெய் கழிவானது பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றில் கலந்து கடலில் கலந்தது. இதனால் எட்டு கிராம மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக 8 கிராம மீனவ மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. அவர்கள் தற்போது வரை அங்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு இன்னும் சில காலம் ஆகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எண்ணெய் கழிவு பெரும்பாலும் அகற்றியதாக அரசு கூறினாலும், இன்னும் பல இடங்களில் எண்ணெய் கழிவு அகற்றும் பணி தொடர்ந்து வருகிறது. இதற்கு தற்போது ஆறுதல் சொல்லும் விதமாக வேண்டுமானால் தமிழக அரசு 6000 ரூபாய் நிதியைஅறிவித்து இருக்கலாம். ஆனால் இங்கு மக்களின் பொருளாதார பாதிப்புகளையும், சுகாதார பாதிப்புகளையும் சரி செய்ய வேண்டிய நிலை உள்ளது என குறிப்பிட்டு பேசினார்.

எண்ணெய் கசிவு ஏற்பட்டதன் காரணமாக மக்கள் சந்தித்த பாதிப்புகளுக்கு நீண்ட கால இழப்பீட்டை சிபிசிஐ நிறுவனம் வழங்க வேண்டும். இதற்கான முழு பாதிப்புகளை சரி செய்யும் பொறுப்பை சிபிசிஎல் நிறுவனம் ஏற்க வேண்டும் என முற்றுகை போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தினர்.