court custody: அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறு பேச்சு.! R.B.V.S. மணியனுக்கு 14 நாட்கள் சிறை!

ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை இழிவுபடுத்தி பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பின் முன்னாள் மாநில துணை தலைவரும், ஆன்மீக சொற்பொழிவாளருமான ஆர்.பி.வி.எஸ்.மணியன் இன்று காலை கைது செய்யப்பட்டார். சென்னை தியாகராயர் நகரில் வைத்து இன்று காலை தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்துத்துவ அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பின் முன்னாள் மாநில தலைவராகவும், ஆன்மீக சொற்பொழிவாளராகவும் இருப்பவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன். இவர் அண்மையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவியது. அதில், அம்பேத்கர், திருவள்ளுவர் உள்ளிட்ட தலைவர்கள் பற்றி அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. அவரது பேச்சில் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதவில்லை.

அம்பேத்கர் இந்த ஜாதியை சேர்ந்தவர், பட்டியல் இனதிற்குள் அவர்களே ஒற்றுமையாக இல்லை என பல்வேறு சாதிய ரீதியிலான சர்ச்சை கருத்துக்களை கூறியுள்ளார். மேலும், திருக்குறளை திருவள்ளுவர் எழுதவில்லை. அப்படி ஒரு ஆளே இல்லை எனவும் பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து இன்று காலை டி.நகரில் உள்ள ஆர்.பி.வி.எஸ்.மணியனின் வீட்டில் போலீசார் அவரை கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, அவதூறு வழக்கில் கைதான R.B.V.S. மணியன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில், அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் R.B.V.S. மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

R.B.V.S. மணியனை செப்.27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. மணியனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என மணியன் தரப்பு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிபதி தெரிவித்தார்.