கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி.! அரசு மரியாதை அறிவிப்பு.!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி அறிந்ததும், தேமுதிக தொண்டர்கள் , ரசிகர்கள் என பலர் தனியார் மருத்துவமனையிலும்,  சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலும் குவிந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் மறைவு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கல் செய்தியை வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும், விஜயகாந்த் மறைவுக்கு சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது அமைச்சர் கே.என்.நேரு, திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் வந்து அஞ்சலி செலுத்தினர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்…!

விஜயகாந்த் மறைவு குறித்து தனது இரங்கல் செய்தியை எக்ஸ் சமூக வலைதள பக்கம் வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில், அன்பிற்கினிய நண்பர் – தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். நல்ல உள்ளத்திற்குச் சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர்.

நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக இருந்தவர். குடும்ப நண்பராக என்னிடம் பழகியவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர். தனது திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளைத் தலைவர் கலைஞர் தலைமையில் நடத்திய தமிழ் உணர்வாளரான நண்பர் விஜயகாந்த், நடிகர் சங்கத்தலைவராக இருந்தபோது தலைவர் கலைஞர் அவர்களின் கலையுலகப் பொன்விழாவைப் பாராட்டி, திரையுலகின் சார்பில் மாபெரும் விழா எடுத்து, தங்கப் பேனாவை பரிசாக அளித்தவர். தலைவர் கலைஞர் அவர்கள் உடல்நலன் குன்றியிருந்தபோது, நேரில் வந்து உடல்நலன் விசாரித்து சென்றதுடன், தலைவர் கலைஞர் மறைவெய்ந்தியபோது, வெளிநாட்டில் இருந்த நண்பர் விஜயகாந்த் கண்ணீர் மல்க காணொளி அனுப்பி தன் இரங்கலைத் தெரிவித்ததையும், வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் நேராகச் சென்னை கடற்கரையில் உள்ள தலைவர் கலைஞரின் ஓய்விடம் சென்று தன் வணக்கத்தைச் செலுத்தியதையும் எவரும் மறக்க முடியாது.

அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை. நண்பர் விஜயகாந்த் உடல்நலன் குன்றியிருந்த நிலையில், இரண்டு முறை நேரில் சென்று சந்தித்து, அவர் விரைந்து நலம் பெற விரும்பினேன். இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டிருக்கிறது. கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் கொண்டு, கேப்டன் விஜயகாந்த்தை இழந்து தவிக்கும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும், திரையுலகத்தினருக்கும், இரசிகர்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவிதத்தார்.

அதன்படி மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறுதி ஊர்வலமானது அரசு மரியாதையுடன் நாளை காலை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விஜயகாந்த் உடலானது சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.