திருவாரூர், நாகைக்கு முதலமைச்சர் 4 நாள் பயணம்!

நான்கு நாள் பயணமாக திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். சென்னையில் 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி சென்று அங்கிருந்து இரவு நாகை மாவட்டத்துக்கு செல்கிறார் முதலமைச்சர். அதன்படி, திருக்குவளையில் ஆக.25ம் தேதி காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

பின்னர் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்று திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். முதலமைச்சரின் கள ஆய்வு திட்டத்தின் கீழ் ஆக.26ம் தேதி 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆக.26ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதையடுத்து, ஆக.27ல் திருத்துறைப்பூண்டியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மீண்டும் சென்னை திரும்புகிறார் முதலமைச்சர். இந்த நாள் பயணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.