புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு வருகை..!

வங்கக்கடலில் உருவான ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நன்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் இந்த 4 மாவட்டங்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. பள்ளிகள், வீடுகள் என பல்வேறு இடங்களில் வெள்ளநீர் புகுந்து லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பால், உணவு பொருட்கள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வந்தனர்.

தற்போது அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் , தனிப்பட்ட நபர்கள் என பல்வேறு தரப்பினர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட  4 மாவட்டங்களில் தற்போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதற்கிடையில் கடந்த 7-ஆம் தேதி  மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தார்.

‘மிக்ஜம்’ புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களை ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்வையிட்டார். பின்னர் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  உடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட சேதங்களை சரி செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ. 5,060 கோடி வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதனைதொடர்ந்து, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 450 கோடியும், சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து ரூ.561 கோடியை மத்திய அரசு விடுவித்தது.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய குழு இன்று சென்னை வருகிறது.  இந்த மத்திய குழு, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளது.