#BREAKING: இன்று முதல் இங்கு குறைந்த விலையில் தக்காளி – அமைச்சர் அறிவிப்பு

இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு.

தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த நிலையில், தக்காளி விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

அதன்படி, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று முதல் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத்துறையின் 65 பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வெளிச்சந்தையில் தக்காளி விலை கட்டுக்குள் வரும் வரை பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் விற்கப்படும் என கூறினார்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறையின் பண்ணை பசுமை கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும். முதற்கட்டமாக நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.85 வரை விற்கப்பட்டது என்றும் தேவையின் அடிப்படையில் நியாயவிலை கடைகள் மூலமும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment