#BREAKING: வரும் 24 முதல் தற்காலிக சான்றிதழ்.. நாளை முதல் மறுகூட்டல் – அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் ஜூன் 24-ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.

தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். அதன்படி, தமிழகம், புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்தனர். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதுபோன்று தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றன. 10-வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 24 முதல் வழங்கப்படும் என்றும் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 27-ல் தொடங்கும் என்றும் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2-ல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 24-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பள்ளிகள் வாயிலாக ஜூன் 24 காலை 11 மணி முதல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.dge.tn.nic.in இணையதளம் மூலமாகவும் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் வரும் 29-ம் தேதி வரை மறுகூட்டலுக்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment