#BREAKING: 24 மணிநேரத்தில் தாழ்வுமண்டலமாக வலுவிழக்கும் அசானி.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை!

அசானி புயல் 24 மணிநேரத்தில் தாழ்வுமண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை மையம் தகவல்.

தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் மழை தொடரும் என்றும் ஆந்திரா அருகே வங்கக்கடலில் நிலவும் அசானி புயல் 24 மணிநேரத்தில் தாழ்வுமண்டலமாக வலுவிழக்கும் என்றும் கூறியுள்ளது. தற்போது ஆந்திராவுக்கு அருகே மத்திய மேற்கு வங்கக்கடலில் அசானி புயல் நிலவி வருகிறது. இந்த புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுபோன்று தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.