துரோகம் செய்த ஈபிஎஸ்! கூட்டணி இல்லை என்றாலும் தனித்துப் போட்டியிடுவோம் – டிடிவி தினகரன் பேட்டி

கோடநாடு சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டு அரசு தண்டிக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவிதினகரன், சென்னையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன்பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், எனக்கும், சசிகலாவுக்கும், ஓபிஎஸ்க்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. துரோகம் செய்த ஈபிஎஸ் தான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும். ஈபிஎஸ் அணியினர் தான் மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் உள்ளனர் என தெரிவித்தார். கோடநாடு சம்பவம் நடைபெற்ற போது துணை முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ்.

ஈபிஎஸ் ஆட்சியில் கோடநாடு சம்பவம் தொடர்பான தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் உள்ள நிலையில், உண்மையான குற்றவாளிகளை அரசு தண்டிக்க வேண்டும். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நடைபெறும் போராட்டங்களுக்கு எங்களின் ஆதரவும் உண்டு என தெரிவித்த அவர்,  கூட்டணி இல்லை என்றாலும் தனித்துப் போட்டியிடுவதற்கு தயாராக உள்ளோம். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை என்றும் DMK Files 2-ஐ அதிக ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.