ஐ.டி அதிகாரிகள் மீது தாக்குதல் – ஆய்வாளர் பதிலளிக்க ஆணை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு..!

கரூரில் வருமான வரிதுறை சோதனையின் போது, தாக்கியது தொடர்பான வழக்கில்  கரூர் நகர காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 19 பேர் பதிலளிக்க உத்தரவு.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் மே 25ல் நடந்த சோதனையின்போது தாக்குதல் என வருமானவரித்துறை துணை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீது உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மனு மீதான வருமானவரித்துறை வாதத்தின் போது, கரூரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சோதனையில் ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கங்கள் சிக்கியது. கணக்கில் வராத ரொக்கத்துடன் ஏராளமான ஆவணங்களும் சோதனைகள் சிக்கின. வருமான வரி சோதனையின் போது முறையாக தகவல் தெரிவித்து கையெழுத்து பெறப்பட்டது.

வருமானவரி சோதனையின் போது ஒரு கூட்டம் அதிகாரிகளை தாக்கி மடிக்கணினி, பென்டிரைவ், பணத்தைப் பறித்தது. பறிக்கப்பட்ட பென்ட்ரைவ்களில் அரசு தொடர்புடைய முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன. பறிக்கப்பட்ட பென்ட்ரைவ், மடிக்கணினி திரும்பத் தரப்பட்ட போதிலும் பென் டிரைவில் தகவல்கள் அளிக்கப்பட்டு இருந்தது. கைப்பற்றிய பணம் திரும்ப வழங்கப்படவில்லை.

மேலும், வழக்கில் கைதான 19 பேருக்கும் வழங்கப்பட்ட ஜாமீன், முன் ஜாமீனை  ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இதனையடுத்து கரூரில் வருமான வரிதுறை சோதனையின் போது, தாக்கியது தொடர்பான வழக்கில்  கரூர் நகர காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 19 பேர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து, இந்த வழக்கு மீதான விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.