ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி- 30 காவலர்கள் கொண்ட தனிப்படை அமைப்பு..!

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க 30 காவலர்கள் கொண்ட தனிப்படை அமைப்பு. 

பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரிசை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆருத்ரா மோசடி வழக்கில் ஏற்கனேவே 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு உள்ளதாக பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஆர்.கே.சுரேஷின் வீட்டிற்கு போலீசார் விசாரணைக்காக சென்ற போது அவர் வீட்டில் இல்லாததால், போலீசார் நோட்டீஸ்  அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசிஅம்மாள் தலைமையில் மாவட்ட அளவில் 30 காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment