ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2021-ல் முதலமைச்சராக இருந்தபோது, அவரது ஆய்வு பணிக்காக பாதுகாப்புக்கு சென்ற சிறப்பு டிஜிபி முன்னாள் ராஜேஷ் தாஸ், பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ராஜேஷ் தாஸ், முன்னாள் எஸ்பி கண்ணன் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை  நடத்தினர்.

மேலும், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்முறையீட்டு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய கோரி ராஜேஷ்தாஸ் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.