பாஜகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிப்பு

பாஜகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நடைபயணம் நாளையுடன் நிறைவு பெறும் நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடைபெறும் என் மண் என் மக்கள் வெற்றி விழா நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில், மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “மற்ற கட்சி தொண்டர்களை கஷ்டப்பட்டு அதிமுகவினர் வலை போட்டு சேர்க்கின்றனர். ஆனால் நாங்கள் தலைவர்களை இழுக்கிறோம். கோயம்புத்தூரில் முக்கிய விக்கெட் விழப்போகிறது, நாளை மாலை 5 மணிக்கு கோயம்புத்தூரில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்” என பேசியிருந்தார்.

Read More – மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க ஸ்டாலின்

அவர் இவ்வாறு பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது, மாற்றுக் கட்சிகளை சேர்ந்த பிரபலமான முக்கிய புள்ளிகள் இன்று மாலை 5 மணிக்கு பாஜகவில் இணையப் போகிறார்களா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் இன்று மாலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன், மத்திய அமைச்சர் எல்.முருகன், “பிரதமர் மோடி நாளை தமிழகம் வர இருப்பதால் இன்றைய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக” தெரிவித்தனர்.

Leave a Comment