அமைச்சரை பதவி நீக்கம் பண்ணுங்க முதல்வரே – அண்ணாமலை.!

stalin - annamalai [File Image]

சென்னை : மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும், கள்ளச்சாராயத்தால் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அமைச்சர் மீது ஏன் நடவடிக்கை இல்லை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “கடந்த ஆண்டு ஜூலை மாதம், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய காணொளியை பகிர்ந்து கொண்டு, திமுக அரசின் நடவடிக்கையால் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பதும் வெகுவாக குறைந்து விட்டதாக, தனக்குத் தானே பாராட்டு பத்திரத்தை வாசித்துக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், வாரம் தோறும் ஆய்வுகள் நடத்தப்படும் என்று வீண் விளம்பரமும் செய்திருந்தார்.

இவர்கள் நடத்திய ஆய்வின் லட்சணம்தான், கள்ளச்சாராயத்தால் இன்று 55 உயிர்களைப் பறிகொடுத்துள்ளோம். இத்தனை நடந்த பின்னரும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கள்ள மௌனம் காத்து வருகிறார் முதல்வர்.

திமுகவின் நிர்வாகத் திறமையின்மையை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் எங்கள் சகோதர சகோதரிகளைக் கைது செய்து முடக்குவதில் காட்டும் அக்கறையைச் சிறிதேனும், கள்ளச்சாராய ஒழிப்பில் காட்டியிருந்தால், பல குடும்பங்கள் இன்று ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்திருக்காது.

இனியும் தாமதிக்காமல், மது ஒழிப்பு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதுதான், முதலமைச்சரின் ஒரே தார்மீகக் கடமையாக இருக்கும். செய்வாரா ஸ்டாலின்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.