அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும்.! தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்

தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை, விஜயதசமி விழாக்களை முன்னிட்டு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் விடுமுறை முடிந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, அரசு சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.

இத்தகைய நேரத்தில் பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறி சோதனை நடத்தி, 120 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது தென் மாநில ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.

இது விடுமுறை முடிந்து ஊர் திரும்ப இருந்த மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் இன்று தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதில் போக்குவரத்துத்துறை ஆணையர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் மாறன், “அனைத்து சங்கங்களும் ஒரு மனதாக முடிவெடுத்து கட்டணத்தை தீர்மானித்தோம். இதில் 25 சதவீதம் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 25 சதவீதம் கட்டணத்தைக் குறைந்து அந்த தொகையை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறினோம்.” என்றார்.

மேலும், “ஆனால், இதனை கடைபிடிக்காமல் செயல்பட்ட டிராவல்ஸ்களின் பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இயங்கும். பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். அனைத்து வாகனங்களும் வழக்கம் போல இயங்கும். தமிழகம் முழுவதும் 1800 பேருந்துகள் இயங்கி வருகிறது.”

“அதில் 1500 பேருந்துகள் எங்கள் சங்கத்தில் உள்ளது. அதில் கிட்டத்தட்ட 90 முதல் 95% வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள வாகனங்கள் தமிழகத்தையே சேராத வெளி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள்.” என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் கூறியுள்ளார்.