அதிமுக மாநாடு.. ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு வரும் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும்.

இதனால் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த பல்வேறு ஏற்பாடுகளை அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தங்களின் பலத்தையும், செல்வாக்கையும் காட்டும் வகையில் மாபெரும் மாநாடாக இந்த எழுச்சி மாநாட்டை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.

அதன்படி, இதற்கான பணியில் மதுரை மாவட்ட அதிமுகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுக மாநாட்டிற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில், மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை முன்னிட்டு, தொடர் ஜோதி ஓட்டத்தை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அதன்படி, சென்னையில் இருந்து மதுரைக்கு மாநாட்டு தொடர் ஜோதி ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக இளைஞர் பாசறையை சேர்ந்த 50 பேர் தொடர் ஓட்டமாக ஜோதியை மதுரை நோக்கி கொண்டு செல்கின்றனர்.